Wednesday, May 19, 2010

குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த்திரையுலகம்! கவிஞர் தாமரை

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் International Indian Film Academy  (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்பிற்கு மாற்றியுள்ளனர்.


தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத்) திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலை வீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ‘கான்ட்ராக்டுகள்’ மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!

ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் லண்டனில் நடைபெற்றது. இது புகழையும், பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சய பாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே, கனடா, தென்கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் ‘இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத்துறை வளம் கொழிக்கும் என்பது இந்நாடுகளின் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐய்ஃபா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டு களித்தவர்கள் 45 கோடிப் பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குதான்!

இந்த விழாவை நடத்தவிரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560 கோடி ரூபாய் தரத் தயாராயுள்ளன. அய்ஃபா-2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் அயர்லாந்துதான் 2009 இறுதிவரை முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்திய தரப்பு அதிகார பூர்வமாக வழங்கியது.

2010 பெப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பு பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டு விட்டது. ‘இது இலங்கையின் மாபெரும் உலக சாதனை’ என்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.

கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யா ராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் ‘அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதை’ உலகமே பார்க்க உதவப் போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (People’s Tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி ‘அழகும் அமைதியும்’ அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.

தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)

சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித் திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக் கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ‘ராவணன்’ கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக / கேளிக்கை வணிகப்பிரிவின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் இவரையும் ரஜினியையும், ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. ‘தமிழன் இரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள் தானா கிடைத்தோம்’ என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்த செய்திகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.

ஆனால் இது போதாது. தமிழ்த் திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழ் உறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?

இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தமிழ்த் திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. இராமேசுவரத்துக்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல் கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழுவலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து விடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.

நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயல்படவேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு

சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயரெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தில் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரல் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லாருக்கும் நினைவிருக்கிறது.

பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் மனம் வைத்தால் ஐய்ஃபா 2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.

கவிஞர் தாமரை

நாம் தமிழர்' முத்துக்குமாரின் பெற்றோர் இயக்க கொடியை ஏற்றி வைத்தனர்.

மதுரை, மே.19-


அனைத்து துறைகளிலும் தமிழே ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று `நாம் தமிழர்' இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

மதுரை விரகனூர் அருகில் உள்ள ரிங் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நேற்று நாம் தமிழர் இயக்க மாநாடு நடந்தது. மாநாட்டையொட்டி, காலையில் தெப்பக்குளம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. விரகனூர், ரிங் ரோடு வழியாக மாநாட்டு திடலை பேரணி அடைந்தது.

மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தமிழருவி மணியன், நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏந்தி மாநாட்டை தொடங்கி வைத்தனர். முத்துக்குமாரின் பெற்றோர் இயக்க கொடியை ஏற்றி வைத்தனர்.

தீர்மானங்கள்

சீமான், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, தமிழருவி மணியன், பேராசிரியர் தீரன், சாகுல் அமீது உள்பட பலர் மாநாட்டில் பேசினார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உலகில் போர்யுத்தம் நடைபெறும் நாடுகள் பற்றி ஆய்வு செய்யும் அமைப்பான சர்வதேச நெருக்கடி ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசை இனப்படுகொலை செய்த அரசாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

குடியுரிமை

எண்ணற்ற உயிர் தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் செய்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக தாயக விடுதலைக்காக போராடி வரும் ஈழத்து மக்களுக்கு தனி தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு கிடையாது. மத்திய அரசு தமிழ் ஈழத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.

ஐந்தாறு தலைமுறைகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் 1.5 லட்சம் குழந்தைகள் உள்ளிட்ட 4.5 லட்சம் மலேசிய தமிழர்களுக்கும் மலேசிய அரசியல் சாசன பிரிவுகளில் கண்டவாறு குடியுரிமை வழங்க மத்திய அரசு மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்.

அகதிகள்

இந்தியாவில் வாழும் திபெத்திய அகதிகளுக்கு வழங்கப்படுவது போல அனைத்து உரிமைகளையும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சிறப்பு முகாம் என்ற பெயரில் நடத்தும் அனைத்தும் முகாம்களையும் கலைத்து விட்டு ஈழத்தமிழர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்.

காலக்கெடு எதுவும் இல்லாமல் உரிய தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் வாடும் நளினி, பொழிலன், குனங்குடி அனீபா உள்பட சிறையாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

தமிழே ஆட்சி மொழி

தமிழில் படித்தோருக்கு மட்டுமே தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு, அனைத்து துறையிலும் தமிழே ஆட்சி மொழி, அனைத்து படிப்பிலும் தமிழே பயிற்று மொழி, வழிபாட்டு தலங்களில் தமிழே வழிபாட்டு மொழி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நலிந்து வரும் வியாபாரத்தை லாபகரமாக்கிடவும், நிலம், வீடு, காற்று மாசு அடைவதை தடுக்கவும், தரமான உணவு உற்பத்தி செய்திடவும், நோய்க்கு காரணமான ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை வழி விவசாயத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த உத்தரவிடுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Tuesday, May 18, 2010

தல் அரசியல் இன எழுச்சி மாநாடு இன்று மதுரையில்..


மானமுள்ள தமிழராய் மதுரையில் கூடி நாம் தமிழராய் ஒன்றிணைந்து  தமிழர்களுக்கான அரசியலை தமிழர்களே முன்னெடுக்க, தமிழ் தேசிய அரசியல் தமிழக அதிகாரத்தை நோக்கி நகர்த்த  முதல் அரசியல் இன எழுச்சி மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது...

அய்யா பெருந்தமிழர் தமிழருவி மணியன் அவர்களும் மலேசியா துணைமுதல்வர் அய்யா பெருந்தமிழர் ராமசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியை நேரலையாக மீனகம் மாறும் நாம் தமிழர் இணைய தளத்தில் காணுங்கள்...

என்றும் உணர்வோடு எங்களோடு இணைந்து இருங்கள்... உங்கள் வாழ்த்துகளை எதிர் நோக்கி...வென்றாகவேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்...

Thursday, May 13, 2010

தமிழச்சாதி ஒரு குவலயக் குடும்பம்.

இன்றும் நீங்கள் எதுபற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்?


ஈழத்தில் வாழும் என் உடன் பிறப்புக்கள் பள்ளிக்குப் போக முடியவில்லையே, பட்டம் பெறமுடியவில்லையே, பணம் சம்பாதிக்க முடியவில்லையே, பகட்டான வாழ்க்கை வாழமுடியவில்லையே, பகலிரவு பார்க்காமல் நிம்மதியாகத் தூங்க முடியவில்லையே, எனப் பதறிக்கொண்டிருக்கின்றன.

உலகத் தமிழர்களே நீங்கள் ஈழத்தில் தமிழன் இழந்துக் கொண்டிருப்பதை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் ஈழத் தமிழனுக்கும் இந்திய தமிழனுக்கும், உலகெங்கும் வாழும் எல்லாத் தமிழனுக்கும் சொல்கிறேன். இது உன்னைப் பற்றி நினைக்கும் நேரமில்லை. உன் இனத்தைப் பற்றி நினைக்க வேண்டிய நேரம்.

தன் இனத்தையும் தாய்மொழியையும் பலியிட்டாவது தன்னலத்தைக் காப்பற்றிக் கொள்ளவேண்டும் என நம்மவரில் பலர் மோதிக்கொண்டிக்கின்றனர்.

என் இனம் இல்லாமல், என் மொழியில்லாமல் நான் மட்டும் எப்படி இருக்க முடியும். இந்த நல்லறிவு கூட இல்லாதவர்கள் அவர்கள்.

தமிழா! நீயும் அப்படி இருந்துவிடகூடாது. நம்மினம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய பண்பாட்டையும் நாட்டையும் உடையதாக இருந்தாலும், கடந்த 1200 ஆண்டுகளுக்கு மேலாக அன்னியரால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனக்கென்று ஒரு தனியரசு இல்லாமல் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இலங்கையில் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராக 60 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் இறுதிக் கட்டமாக இனமொழிப்பு என்ற முயற்சியில் சிங்களப் பேரினவாதம் ஈடுபட்டுள்ளது.
எல்லாத் தமிழனும் தன்னுடைய சுயநல வாழ்வை அதாவது வழக்கமான வாழ்வை ஒத்திவைத்து ஈழத்தமிழின விடுதலைக்காக, இனமொழிப்புக்கு எதிராக, தமிழினத் தாயக மீட்புக்காக, தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் ஆண்ட இனம் மீண்டும் ஆளும் நிலை உண்டாகும். தாழ்ந்த இனம் மீண்டும் தலை நிமிரும். மாண்ட நம் போராளிகளின் மரணத்திற்கு அர்த்தம் உண்டாகும்.

மறுவீடு தேடிப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் மனங்களின் உறுதி உண்டாகும். இவற்றுக்கெல்லாம் மேலாக உண்மையும் நீதியும் வென்றிட தமிழனின் சுதந்திரப் போராட்டம் வகை செய்ததே என்ற உலகப் பெருமையும் உண்டாகும்.

என் இனிய தமிழ் உடன்பிறப்புகளே! மறுபடியும் சொல்கிறேன். மறக்க வேண்டாம். மறைந்து போகும் உங்கள் வாழ்விற்கு ஓர் அர்த்தத்தைத் தேட, மறக்க வேண்டாம். நம்முடைய உடனடித் தேவை கல்வியல்ல, பட்டங்கள் அல்ல, செல்வமல்ல, பதவிகள் அல்ல, ஈழத்தில் நம்மினத்திற்கென ஒரு தாயகம்.

அதை நினைவில் நிறுத்து.

மலரும் நமக்கொரு தாயகம்.

அதன் பின் மங்காத புகழோடு நாம் அங்கே வாழலாம்.

உலகத் தமிழினம் ஓர் இனம்.

தமிழச்சாதி ஒரு குவலயக் குடும்பம்.